2025 ஆம் ஆண்டு தெற்காசிய விவசாய மாநாடு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானதுடன் கௌரவ மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பாரத் துணைக் கண்ட வேளாண்மை அறக்கட்டளை (BSAF) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்தில் விவசாய வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக 30 க்கும் அதிகமான துறைசார் பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர்.
மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் தனது சிறப்புரையில், உலகளாவிய விவசாய வர்த்தகத்தில் இலங்கையின் முக்கிய பங்களிப்பு குறித்து கருத்துக்களை தெரிவித்ததுடன், குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் தேயிலை,கறுவா, இறப்பர் மற்றும் தேங்காய் உற்பத்தி ஊடாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
காலநிலை மாற்றம் மற்றும் சந்தை ஏற்றத் தாழ்வு போன்ற சவால்களை எதிர்கொள்வதற்கு புத்தாக்கம், நிலைபேண்தன்மை மற்றும் சர்வதேச கூட்டு முயற்சியின் முக்கியத்துவம் தொடர்பில் ஆளுநர் இங்கு வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் இலங்கையின் முன்னணி விவசாய உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,கண்காட்சியுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களும் நடைபெற்றன.